Monday, September 24, 2012

கூடங்குளத்தில் வீணாகிறது (வீணானது) பல கோடி!!!

போராடும் ஒரு பகுதி மக்கள் !
பொறுக்காத சக குடிமக்கள் !!

இத்தனை பொருட் செலவில், பல ஆண்டுகாலமாய் கட்டிய கட்டிடம் வீணாவதா?... ஆரம்பத்திலேயே போராடாமல் இப்போது எதிர்ப்பது நியாயம்தானா?

இன்றைய காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியும், விஞ்ஞான வளர்ச்சியும், பலவகை மின் சாதனங்களின் மின்சாரத் தேவையும் அணு உலையை அவசியமாக்குகின்றன. இந்த உலை இயங்கினால் தான் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் என்பது போன்ற மாயையை நம் மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது தான் உண்மை. இந்த உலை ஏதோ முழுவதுமாக தமிழ்நாட்டுக்கு பயன்படப்போவது போல் பொய் பிரச்சாரம் எதற்கு? இந்த மின்சாரத்தால்தான் இருளில் மூழ்கிய தமிழகம் ஒளி பெரும் என்றால், இதற்கு முன் எப்போதுமே இருளிலேயேவா இருந்தோம்.? எப்போதும் போல் தமிழ்நாட்டிற்கு அளித்து வந்த மின்சாரத்தை மத்திய அரசு அளித்தாலே பாதி மின் தடை நீங்கிவிடும். இந்த உலையில் இருந்து வரும் மின்சாரத்தில் எவ்வளவு மின்சாரம் யாருக்கு என்பதெல்லாம் வெள்ளை அறிக்கையாக வெளிவரப்போவதும் இல்லை. அணு உலை இயங்குவதால் தமிழ் நாட்டுக்கு என்ன லாபம்?. ஆனால் இந்த தருணத்தில் நாம் முக்கியமாக உணரவேண்டியது  பலவழிகளிலும் தமிழன் ஏமாற்றப்படுகிறான், அனைத்தும் அரசியல் லாபத்திற்காகவே நடத்தப்படுகின்றன.

காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, சிறுவாணி குறுக்கே கேரளாவின் புதிய அணை, கச்சத்தீவு பிரச்சனை, இலங்கை கடற்படையினர் பிரச்சனை இவ்வளவிலும் காஸ் பைப் கேரளாவில் இருந்து தமிழக விளை நிலங்கள் வழியாக கர்நாடகம் கொண்டு செல்லும் திட்டம் வேறு .
இதை எல்லாம் எதிர்த்து மத்திய அரசிடம் பேசவோ, வலிமையான போராட்டம் நடத்தவோ முடியாத மந்திரிகள், கட்சிகள், ஆனால் நாடே ஸ்தம்பிக்கும்  அளவில் ஊழல் நடத்த மட்டும் அதிகார மையம் மத்தியில் உண்டு.
இதை எல்லாம் மத்திய அரசு தெரிந்தேதான் செய்கிறதா?  அல்லது தமிழனும் தமிழ்நாடும் ஒதுக்கப்படுகிறதா???

500 கோடிக்கு ஒலிம்பிக் கிராமம் அமைத்து ஊர் அறிய, உலகறிய ஊழல் இந்தியாவின் முகத்திரையை கிளித்துக்கொண்டது. பல்லாயிரம் கோடி நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்பெக்ட்ரம்  ஊழல். இதெல்லாம் ஒருபுறம் என்றால், நம் தமிழ் நாட்டில் 1000 கோடிக்கு கட்டிய புதிய "தலைமை செயலகம் மற்றும் சட்டசபை வளாகம்" புறக்கணிக்கபட்டது, அண்ணா நூலகம் மாற்ற அறிவிப்பு வந்து  பின் அது மக்கள் போராட்டத்திற்கு பிறகு தடுத்து நிறுத்தப்பட்டது.
கோடி கோடியாய் செலவழித்து அதற்கே அதற்க்கென்று பிரத்ஏகமாய் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களை அரசிய காழ்புணர்ச்சி காரணமாக தூக்கி எரியும் உரிமையை யார் அவர்களுக்கு கொடுத்தது? அங்குமட்டும் மக்களின் வரிப்பணம் வீனாகவில்லையா? 1000 கோடி செலவு செய்தும் கட்டிடம் முடியும் முன்பே தான்தான்  திறந்துவைக்க வேண்டும், சரித்திரத்தில் இடம்பெறவேண்டும்  என்று கட்டி முடித்ததுபோல மேலும் பல கோடி செலவுசெய்து பிரம்மாண்ட பெருவிழா நடத்தி பெருமை தேடிக்கொண்ட சிறுமை தலைவருக்கு அது மக்கள் பணமென்று தெரியவில்லையா? அப்போது இந்த தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் வீணானது ஏனோ தெரியாமல் போனது. கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை எல்லாம் அரசுக்கு நஷ்டம் இல்லையா? அப்போ டாஸ்மாக் லாபத்தை மட்டும் நம்பியா அரசு செயல்படுகிறது, புது புது திட்டங்களை போடுகிறது?

ஏதோ இந்த அணு உலையால் மட்டுமே கோடிக் கோடியாய் நஷ்டம் ஏற்படும் போல மத்திய மாநில அரசுகள் பேசிவருகின்றன. ஆனால் இந்த அணு உலை என்பது ஒரு  விஞ்ஞான வளர்ச்சி அல்ல, அது தலைமுறைகளைத் தாண்டி வீசப்போகும் விஷமென்ற கதிர்வீச்சு.

எவ்வளவோ போராட்டங்களுக்கு பிறகு, பல முறை மக்களிடம் எடுத்துச்சொல்லி இன்று அவர்களின் வாழ்வாதாரங்களுக்காக ஒருமித்து குரல்கொடுக்கையில், அதை ஒட்டுமொத்தமாக நசுக்க முயல்வதா? தேச துரோகம் என்பதா?

இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதற்காக ஒசாமாவை கொன்றுவிட்டேன் என்று மார்த்தட்டும் அமெரிக்கா எங்கே, 28 ஆண்டுகள் கடந்தும் "வர்றேன்  அன்டேர்சன் (Warren Anderson )" தப்பி ஓடவிட்டு இன்னும் பிடிக்க முடியாதபடி நாடகம் ஆடும் நமது இந்திய அரசு எங்கே?. அமெரிக்காவின்  இழப்பு 3000 உயிர்கள்- அதற்க்கே 10 ஆண்டுகளாக போரை நடத்தி வருகிறனர். இங்கோ போபாலில் 8000 கும் மேற்ப்பட்ட மனித உயிர் பலி, அதை தொடர்ந்த நோய்கள், மரபியல் மாற்றங்கள், இன்னும் தீரவில்லை அவர்களுக்கு. வழக்கு விசாரித்து முடியும் முன்னரே அவ்வழக்கில் சம்மந்தப்பட்ட பலர் இறந்துவிட்டனர். இதுதான் நமது நீதித்துறை. இதுபோல் தெரிந்தவை சில, தெரியாதவை பல, ஆனால் நமக்கு மட்டும் இன்னும் புத்தி தெளியவில்லை.

இத்தனை நாட்கள் கூடங்குளத்தில் கேட்கப்படாத நம் காதுகள் இன்று சிலரால் நின்று கவனிக்கப்படுகிறது, அந்த மக்களுடன் சேர்ந்து இன்னும் கொஞ்சம் சத்தமாய் ஒலிக்கிறது, அதற்காக இத்தனை நாட்கள் ஒலிக்கவில்லை என்பது பொருளல்ல.

ஏதோ அணு உலை மட்டும்தான் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் எடுத்து சொல்வது போலவும், அதை விரும்பாத மக்கள் தேசத்துரோகிகள் போல இந்த பிரச்னையை அணுகுவது பகுத்தறிவு ஆகாது என்றே தோன்றுகிறது.
எந்த ஒரு புதிய கண்டிபிடிப்பும் ஆரம்பத்தில் வளர்ச்சியாக தெரிந்தாலும் அதை சிலகாலம் பயன்படுத்திய பிறகே, பயன்படுத்தியவர்களை வைத்து என்னென்ன பிரச்சனைகள் வரக்கூடும் என்று அறியவருகிறது. அதைப்போலத்தான் பல வளர்ந்த நாடுகளில் இவ்வளவு காலமும் ஏற்படாத விழிப்புணர்வை ஜப்பானியர்களின் உயிர் தியாகத்தால் உலகிற்கு இயற்கை புரியவைத்துள்ளது. (மேலை நாடுகள் அணு சக்தி என்ற பெயரில் நம்நாட்டை சந்தையக்குவது வேறு கதை...!!!).

நம்நாட்டின் இன்றைய தலைவர்களின் மீதோ, சட்டத்தின் மீதோ இருந்த நம்பிக்கை பலவிதங்களில் அவர்களாலேயே அழிக்கப்பட்டு விட்டது. இதுவரை நீதி கிடைக்காத பல விபத்துகள், வருடா வருடம் சிவகாசியில் விபத்து ஏற்பட்டும் எந்த ஒரு பாதுகாப்பு விதிமுறைகளோ, சட்டமோ கொண்டுவரப்படவில்லை. சூடு, சொரணை அற்ற மக்களின் உயிர் போகும் இல்லை என்றால் கை கால்கள் போகும் என்று தெரிந்தும் எதிர்த்து கேட்க  இயலாமல் சாவின் விளிம்பில் வாழ்க்கை நடத்துகின்றனர்.

இந்த அரசை... அதிகாரிகளை... நீதித்துறையை... நம்பி அணு உலையா?

இன்னும் ஏமாற தமிழர்கள் என்ன வீரம் இல்லா முட்டாள்களா?
சட்டப்பேரவையை மருத்துவமனை ஆக்க முடியும்போது, நம் தமிழக அரசு, மத்திய அரசும் சேர்ந்து இந்த 1400 கோடிக்கு மாற்று வழி கண்டுபிடிக்கட்டுமே !!!
ஒரு உண்மையான உணர்வின் உரிமை போராட்டத்திற்காக 1400 வீணானதாக இருக்கட்டுமே!!!
மாற்றுவழி மின்சாரம் கண்டுபிடிக்கட்டுமே !!!
ஒரு சமூக மக்களின் போராட்டம் வென்றதாக சரித்திரம் சொல்லட்டும் !!!
இந்த அணு உலையை அதன் வெற்றிச் சின்னமாக்குவோம்!!!

Tuesday, February 14, 2012

ஆர்.டி.ஐ.ஆயுதம்...அலறும் அதிகாரிகள்....

''ஓட்டுப் போடுறது மட்டுமே நம்ம ஜனநாயக உரிமை இல்லை. ஓர் இந்தியக் குடிமகனா, நமக்கு நிறையவே உரிமைங்க இருக்கு. அரசாங்கத்தோட உயர் பொறுப்புகள்ல இருக்கறவங்கள நிக்க வெச்சு கேள்வி கேட்கவும், அவங்க தவறு செய்யுறபட்சத்துல தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அந்த உரிமைகளுக்கு வலிமை இருக்கு. அதை நான் சரியா பயன்படுத்திட்டு இருக்கேன்!''

- குரல் உயர்த்திப் பேசவில்லை. இருந்தாலும் தைரியத்தால் நிரம்பி இருந்தன பூமாவின் வார்த்தைகள்!

குழந்தைகள், கணவர் என்று குடும்பம் சுமக்கும் இல்லத்தரசிகளில் ஒருவர்தான் பூமா. ஆனால், அதோடு தன்னை சுருக்கிக் கொள்ளாமல், 'ஆர்.டி.ஐ' எனப்படும் 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்'(RTI - Right to Information Act) மூலம் தனக்கும், தன்னைச் சுற்றி வசிப்பவர்களுக்குமான அடிப்படைத் தேவைகளை பெற்றுத் தரும் பெண் போராளியாகவும் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்!

''என்னோட பசங்கள ஸ்கூல்ல இருந்து ஈவ்னிங் 4.15-க்கு கூட்டி வருவேன். திரும்பவும் ஆறு மணிக்கு அவங்களோட நானும் யோகா கிளாஸுக்குப் போயிடுவேன். இடைப்பட்ட நேரத்தில் பேசலாமா..?'' என்று நம்முடைய தொலைபேசி அழைப்புக்கு பதில் சொன்னார் பூமா. குறித்த நேரத்தில் சென்னை, அம்பத்தூரில் இருக்கும் அவரது இல்லத்தில் ஆஜரானோம். எளிமையான உடையும், எதார்த்தமான பேச்சுமாக அறிமுகமானார் பூமா!

''ஊத்துக்கோட்டை பக்கத்துல இருக்கற அனந்தேரி கிராமம்தான் என்னோட தாய்பூமி. ப்ளஸ் டூ வரைதான் படிச்சுருக்கேன். என்னோட காதல் கணவர் ஸ்ரீராமன், தனியார் நிறுவனத்தில் ஜி.எம். அவரோட டிரான்ஸ்ஃபர்களால் 14 வருஷமா இந்தியாவோட பல ஸ்டேட்களை, மக்களை, மொழிகளை, கலாசாரங்களைப் பழகியாச்சு. இந்த அனுபவங்கள்தான் இப்பவும் அரசு அதிகாரிகள், காவல்துறைனு யார்கிட்டயும், எந்தத் தயக்கமும் இல்லாம என்னை அணுக வைக்குது'' என்ற பூமா, முதல் முறையாக 'தகவல் அறியும் உரிமைச் சட்ட'த்தை கையில் எடுக்க வைத்த அந்தச் சம்பவத்தைப் பகிர்ந்தார்.

''ரெண்டு வருஷத்துக்கு முன்ன குடும்பத்தோட ஆந்திராவுக்கு டூர் போயிருந்தப்போ, டிரெயின்ல டிக்கெட் புக் செய்திருந்தோம். எங்களோட ஸீட்ல வேற ஆட்கள் உட்கார்ந்திருந்தாங்க. கேட்டா, 'டி.டி.இ-தான் உட்காரச் சொன்னார்’னு சொன்னாங்க. அவர்கிட்ட கேட்டப்ப, 'உங்களுக்கு கன்ஃபார்ம் ஆன ஸீட்ஸ் இது இல்லை’னு சொன்னவர், வேற ஸீட்டையும் தரல. அப்போ என் கணவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் வலுக்க, அதை நான் என் மொபைல்ல ரெக்கார்ட் செய்தேன்.

வேற வழியில்லாம டிரெயின்ல நின்னுட்டே வந்த நாங்க, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, ஸ்டேஷன் அதிகாரிகள்கிட்ட நடந்ததைச் சொல்லி, ஆதாரமா எங்க டிக்கெட், மொபைல் ரெக்கார்டை எல்லாம் காட்டி, நடந்த சம்பவத்தை அவங்க கைப்பட எழுதி வாங்கிக்கிட்டோம். டூர் முடிச்சு தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு, நடந்த எல்லா விஷயங்களையும் சரியா குறிப்பிட்டு, ஆர்.டி.ஐ. சட்டப்படி கடிதம் போட்டோம். அந்த டி.டி.இ-க்கு தண்டனையா, அவரோட ஊதிய உயர்வை மூணு வருஷத்துக்கு நிறுத்தி வெச்சுடுச்சு ரயில்வே நிர்வாகம். லஞ்சம் வாங்கிக்கிட்டு, எங்க ஸீட்டை மத்தவங்களுக்கு மாற்றிக் கொடுத்ததோட, அதிகார திமிர்ல பேசின அந்த ஆளுக்கு கிடைச்ச இந்தத் தண்டனையை, ஒரு குடிமகனோட வெற்றியா நாங்க கொண்டாடினோம்...''

- இதில் இருந்துதான் ஆரம்பித்திருக்கிறது பூமாவின் ஆக்கப்பூர்வ முயற்சிகள்.

'இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சட்டத்து மேல எனக்கிருந்த மரியாதை பல மடங்கு கூடிடுச்சு. என்னோட தைரியம் அதைவிட பல மடங்கு உசந்துடுச்சு. கணவரும் என்னை உற்சாகப்படுத்தினார். என் பசங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கறதுக்கு தாமதமாயிட்டே இருந்தது. சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு ஆர்.டி.ஐ. சட்டப்படி ஒரு தபால் அனுப்பினேன். ஒரே வாரத்துல பாஸ்போர்ட் வீடு தேடி வந்துடுச்சு.

சமீபத்தில் வீட்டை புதுப்பிச்சோம். எங்க வீட்டுல வேலை பார்த்திட்டிருந்த கார்பென்டர்கள், வேற ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சதும், அங்க போயிட்டாங்க. பலமுறை தொடர்புªகாண்டும் சரியான பதில் இல்லை. 'இதுக்குக் கூடவா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அணுக முடியும்?’னு நீங்க கேட்கலாம். நிச்சயமா. அந்த கார்பென்டர்கள் எனக்குக் கொடுத்திருந்த பில் உள்ளிட்ட ஆவணங்களை வெச்சுக்கிட்டு, கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்டேன். அங்க அது தாமதமாகவே, இந்த விஷயத்தை ஆர்.டி.ஐ. மூலமா நான் கேள்வி எழுப்பினேன். அதுக்குப் பிறகு ஆர்.டி.ஐ. அதிகாரிகள் கேள்வி கேட்க, உடனடியா வந்து வேலையை முடிச்சுக் கொடுத்தாங்க. 15 வருஷமா இழுத்தடிக்கப்பட்ட எனக்குத் தெரிந்தவரின் நில பட்டா பிரச்னைக் கும் ஆர்.டி.ஐ. மூலமாவே பலன் கிடைச்சுது. இதைஎல்லாம் உறவினர், அக்கம் பக்க நண்பர்கள்னு எல்லார்கிட்டயும் பகிர்ந்து, அவங்களுக்கும் ஆர்.டி.ஐ. நம்பிக்கையை கொடுத்துட்டிருக்கேன்'' என்ற பூமா, தொடர்ந்து சமூகப் பிரச்னைகளையும் ஆர்.டி.ஐ. மூலம் எதிர்கொண்டு வருகிறார்.

தெரு பராமரிப்பு, சாக்கடை, கிளை அஞ்சலகம்... என அடுத்தடுத்து பூமா அதிரடி ஆக்ஷன்களில் இறங்க, பகுதி மக்களும் அவருடன் கைகோத்துள்ளனர்.

''ஆரம்பத்துல பொதுப் பிரச்னைக்கான பெட்டி ஷன்கள்ல கையெழுத்துப் போடவே பலரும் தயங்கினாங்க. ஆனா, ஒவ்வொரு படியா வேலைகள் நடக்கறதைப் பார்த்துட்டு, 'ஆளும்பேருமா இறங்குவோம் வாங்க...’னு பலரும் இணைய ஆரம்பிச்சுருக்காங்க'' என்று சொல்லும்போதே, பெருமிதம் அந்த முன்னோடியின் முகத்தில்.

''பாதாள சாக்கடை, குப்பை கான்ட்ராக்ட், மருத்துவமனை குறைபாடுகள்னு எந்தப் பிரச்னையா இருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்கிட்ட முறையிடுங்க. ரியாக்ஷன் இல்லைனா, அந்தப் பிரச்னை பற்றி நமக்குத் தெரிய வேண்டிய விவரங்களை கேள்விகளா எழுதி, 10 ரூபாய்க்கான 'நீதிமன்ற முத்திரை வில்லை' (Court Fee Stamp) ஒட்டி, பக்கத்துல இருக்கற தகவல் அறியும் உரிமைச் சட்ட அலுவலகத்துக்கு அனுப்புங்க. அடுத்த 30 நாட்களுக்குள்ள சரியான காரணங்களோட அவங்க பதில் அனுப்பி வைப்பாங்க. விடாம ஃபாலோ பண்ணுங்க. தவறு செய்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவே இருந்தாலும் உரிய தண்டனை கிடைக்கும்!'' என்று எனர்ஜி கொடுத்த பூமா, தன் குழந்தைகள் ஸ்ரீஷ், ஸ்ரீவத்ஷன் இருவரையும் யோகா வகுப்புக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானார்!

வாழ்த்துகள் போராளியே !

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு சில குறிப்புகள்...

முதலில், நீங்கள் எதுதொடர்பாக புகார் செய்ய விரும்புகிறீர்களோ... அதை உரிய அலுவலகங்களுக்கு முறைப்படி புகார் மனுவாக அளிக்க வேண்டும் (உதாரணத்துக்கு, சென்னையில் குப்பைகள் அள்ளப்படவில்லை என்றால், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிக்கு புகார் அனுப்ப வேண்டும்).

உங்கள் புகார் மனுவுக்கு உரிய பதில் இல்லை என்றால்தான், 'பொதுத் தகவல் அதிகாரி'யை தொடர்பு கொள்ள வேண்டும் (ஒவ்வொரு அரசு அலுவலகத்திலுமே இப்படி ஒரு அதிகாரி இருப்பார்). ஏற்கெனவே நீங்கள் செய்த புகாரின் நகல்களுடன், பத்து ரூபாய் மதிப்பிலான நீதிமன்ற முத்திரை வில்லை ஒன்றை புகாரின் முதல் பக்கத்தில் ஒட்டி அனுப்பினால் போதும்.

இதற்கான பதில் முப்பது நாட்களுக்குள் கிடைக்கவில்லை என்றால், அடுத்தாக 'மேல்முறையீட்டு அதிகாரி'க்கு, புகாரை அனுப்பலாம். அதற்கும் பதில் கிடைக்க தாமதமானால் 'இன்ஃபர்மேஷன் கமிஷனர்' (தமிழ்நாடு - சென்னை) அலுவலகத்துக்கு அனுப்பலாம். இந்த நடைமுறைகளில் ஏதாவது ஓர் இடத்திலேயே உரிய தகவல் கிடைத்துவிடும். நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிடும்.

முதல் தடவை பொதுத் தகவல் அதிகாரிக்கு மனு செய்யும்போது மட்டும் நீதிமன்ற முத்திரை வில்லை ஒட்டினால் போதும். ஒவ்வொரு முறை அனுப்பும் கடிதங்களின் நகல் மற்றும் அனுப்பியதற்கான அத்தாட்சி ஆகியவற்றை நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கடிதங்களை பதிவுத் தபாலில் அனுப்புவது நல்லது. -- Anantha vikadan