Monday, September 24, 2012

கூடங்குளத்தில் வீணாகிறது (வீணானது) பல கோடி!!!

போராடும் ஒரு பகுதி மக்கள் !
பொறுக்காத சக குடிமக்கள் !!

இத்தனை பொருட் செலவில், பல ஆண்டுகாலமாய் கட்டிய கட்டிடம் வீணாவதா?... ஆரம்பத்திலேயே போராடாமல் இப்போது எதிர்ப்பது நியாயம்தானா?

இன்றைய காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியும், விஞ்ஞான வளர்ச்சியும், பலவகை மின் சாதனங்களின் மின்சாரத் தேவையும் அணு உலையை அவசியமாக்குகின்றன. இந்த உலை இயங்கினால் தான் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் என்பது போன்ற மாயையை நம் மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது தான் உண்மை. இந்த உலை ஏதோ முழுவதுமாக தமிழ்நாட்டுக்கு பயன்படப்போவது போல் பொய் பிரச்சாரம் எதற்கு? இந்த மின்சாரத்தால்தான் இருளில் மூழ்கிய தமிழகம் ஒளி பெரும் என்றால், இதற்கு முன் எப்போதுமே இருளிலேயேவா இருந்தோம்.? எப்போதும் போல் தமிழ்நாட்டிற்கு அளித்து வந்த மின்சாரத்தை மத்திய அரசு அளித்தாலே பாதி மின் தடை நீங்கிவிடும். இந்த உலையில் இருந்து வரும் மின்சாரத்தில் எவ்வளவு மின்சாரம் யாருக்கு என்பதெல்லாம் வெள்ளை அறிக்கையாக வெளிவரப்போவதும் இல்லை. அணு உலை இயங்குவதால் தமிழ் நாட்டுக்கு என்ன லாபம்?. ஆனால் இந்த தருணத்தில் நாம் முக்கியமாக உணரவேண்டியது  பலவழிகளிலும் தமிழன் ஏமாற்றப்படுகிறான், அனைத்தும் அரசியல் லாபத்திற்காகவே நடத்தப்படுகின்றன.

காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, சிறுவாணி குறுக்கே கேரளாவின் புதிய அணை, கச்சத்தீவு பிரச்சனை, இலங்கை கடற்படையினர் பிரச்சனை இவ்வளவிலும் காஸ் பைப் கேரளாவில் இருந்து தமிழக விளை நிலங்கள் வழியாக கர்நாடகம் கொண்டு செல்லும் திட்டம் வேறு .
இதை எல்லாம் எதிர்த்து மத்திய அரசிடம் பேசவோ, வலிமையான போராட்டம் நடத்தவோ முடியாத மந்திரிகள், கட்சிகள், ஆனால் நாடே ஸ்தம்பிக்கும்  அளவில் ஊழல் நடத்த மட்டும் அதிகார மையம் மத்தியில் உண்டு.
இதை எல்லாம் மத்திய அரசு தெரிந்தேதான் செய்கிறதா?  அல்லது தமிழனும் தமிழ்நாடும் ஒதுக்கப்படுகிறதா???

500 கோடிக்கு ஒலிம்பிக் கிராமம் அமைத்து ஊர் அறிய, உலகறிய ஊழல் இந்தியாவின் முகத்திரையை கிளித்துக்கொண்டது. பல்லாயிரம் கோடி நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்பெக்ட்ரம்  ஊழல். இதெல்லாம் ஒருபுறம் என்றால், நம் தமிழ் நாட்டில் 1000 கோடிக்கு கட்டிய புதிய "தலைமை செயலகம் மற்றும் சட்டசபை வளாகம்" புறக்கணிக்கபட்டது, அண்ணா நூலகம் மாற்ற அறிவிப்பு வந்து  பின் அது மக்கள் போராட்டத்திற்கு பிறகு தடுத்து நிறுத்தப்பட்டது.
கோடி கோடியாய் செலவழித்து அதற்கே அதற்க்கென்று பிரத்ஏகமாய் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களை அரசிய காழ்புணர்ச்சி காரணமாக தூக்கி எரியும் உரிமையை யார் அவர்களுக்கு கொடுத்தது? அங்குமட்டும் மக்களின் வரிப்பணம் வீனாகவில்லையா? 1000 கோடி செலவு செய்தும் கட்டிடம் முடியும் முன்பே தான்தான்  திறந்துவைக்க வேண்டும், சரித்திரத்தில் இடம்பெறவேண்டும்  என்று கட்டி முடித்ததுபோல மேலும் பல கோடி செலவுசெய்து பிரம்மாண்ட பெருவிழா நடத்தி பெருமை தேடிக்கொண்ட சிறுமை தலைவருக்கு அது மக்கள் பணமென்று தெரியவில்லையா? அப்போது இந்த தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் வீணானது ஏனோ தெரியாமல் போனது. கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை எல்லாம் அரசுக்கு நஷ்டம் இல்லையா? அப்போ டாஸ்மாக் லாபத்தை மட்டும் நம்பியா அரசு செயல்படுகிறது, புது புது திட்டங்களை போடுகிறது?

ஏதோ இந்த அணு உலையால் மட்டுமே கோடிக் கோடியாய் நஷ்டம் ஏற்படும் போல மத்திய மாநில அரசுகள் பேசிவருகின்றன. ஆனால் இந்த அணு உலை என்பது ஒரு  விஞ்ஞான வளர்ச்சி அல்ல, அது தலைமுறைகளைத் தாண்டி வீசப்போகும் விஷமென்ற கதிர்வீச்சு.

எவ்வளவோ போராட்டங்களுக்கு பிறகு, பல முறை மக்களிடம் எடுத்துச்சொல்லி இன்று அவர்களின் வாழ்வாதாரங்களுக்காக ஒருமித்து குரல்கொடுக்கையில், அதை ஒட்டுமொத்தமாக நசுக்க முயல்வதா? தேச துரோகம் என்பதா?

இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதற்காக ஒசாமாவை கொன்றுவிட்டேன் என்று மார்த்தட்டும் அமெரிக்கா எங்கே, 28 ஆண்டுகள் கடந்தும் "வர்றேன்  அன்டேர்சன் (Warren Anderson )" தப்பி ஓடவிட்டு இன்னும் பிடிக்க முடியாதபடி நாடகம் ஆடும் நமது இந்திய அரசு எங்கே?. அமெரிக்காவின்  இழப்பு 3000 உயிர்கள்- அதற்க்கே 10 ஆண்டுகளாக போரை நடத்தி வருகிறனர். இங்கோ போபாலில் 8000 கும் மேற்ப்பட்ட மனித உயிர் பலி, அதை தொடர்ந்த நோய்கள், மரபியல் மாற்றங்கள், இன்னும் தீரவில்லை அவர்களுக்கு. வழக்கு விசாரித்து முடியும் முன்னரே அவ்வழக்கில் சம்மந்தப்பட்ட பலர் இறந்துவிட்டனர். இதுதான் நமது நீதித்துறை. இதுபோல் தெரிந்தவை சில, தெரியாதவை பல, ஆனால் நமக்கு மட்டும் இன்னும் புத்தி தெளியவில்லை.

இத்தனை நாட்கள் கூடங்குளத்தில் கேட்கப்படாத நம் காதுகள் இன்று சிலரால் நின்று கவனிக்கப்படுகிறது, அந்த மக்களுடன் சேர்ந்து இன்னும் கொஞ்சம் சத்தமாய் ஒலிக்கிறது, அதற்காக இத்தனை நாட்கள் ஒலிக்கவில்லை என்பது பொருளல்ல.

ஏதோ அணு உலை மட்டும்தான் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் எடுத்து சொல்வது போலவும், அதை விரும்பாத மக்கள் தேசத்துரோகிகள் போல இந்த பிரச்னையை அணுகுவது பகுத்தறிவு ஆகாது என்றே தோன்றுகிறது.
எந்த ஒரு புதிய கண்டிபிடிப்பும் ஆரம்பத்தில் வளர்ச்சியாக தெரிந்தாலும் அதை சிலகாலம் பயன்படுத்திய பிறகே, பயன்படுத்தியவர்களை வைத்து என்னென்ன பிரச்சனைகள் வரக்கூடும் என்று அறியவருகிறது. அதைப்போலத்தான் பல வளர்ந்த நாடுகளில் இவ்வளவு காலமும் ஏற்படாத விழிப்புணர்வை ஜப்பானியர்களின் உயிர் தியாகத்தால் உலகிற்கு இயற்கை புரியவைத்துள்ளது. (மேலை நாடுகள் அணு சக்தி என்ற பெயரில் நம்நாட்டை சந்தையக்குவது வேறு கதை...!!!).

நம்நாட்டின் இன்றைய தலைவர்களின் மீதோ, சட்டத்தின் மீதோ இருந்த நம்பிக்கை பலவிதங்களில் அவர்களாலேயே அழிக்கப்பட்டு விட்டது. இதுவரை நீதி கிடைக்காத பல விபத்துகள், வருடா வருடம் சிவகாசியில் விபத்து ஏற்பட்டும் எந்த ஒரு பாதுகாப்பு விதிமுறைகளோ, சட்டமோ கொண்டுவரப்படவில்லை. சூடு, சொரணை அற்ற மக்களின் உயிர் போகும் இல்லை என்றால் கை கால்கள் போகும் என்று தெரிந்தும் எதிர்த்து கேட்க  இயலாமல் சாவின் விளிம்பில் வாழ்க்கை நடத்துகின்றனர்.

இந்த அரசை... அதிகாரிகளை... நீதித்துறையை... நம்பி அணு உலையா?

இன்னும் ஏமாற தமிழர்கள் என்ன வீரம் இல்லா முட்டாள்களா?
சட்டப்பேரவையை மருத்துவமனை ஆக்க முடியும்போது, நம் தமிழக அரசு, மத்திய அரசும் சேர்ந்து இந்த 1400 கோடிக்கு மாற்று வழி கண்டுபிடிக்கட்டுமே !!!
ஒரு உண்மையான உணர்வின் உரிமை போராட்டத்திற்காக 1400 வீணானதாக இருக்கட்டுமே!!!
மாற்றுவழி மின்சாரம் கண்டுபிடிக்கட்டுமே !!!
ஒரு சமூக மக்களின் போராட்டம் வென்றதாக சரித்திரம் சொல்லட்டும் !!!
இந்த அணு உலையை அதன் வெற்றிச் சின்னமாக்குவோம்!!!